🛕 திருச்செந்தூர் முருகன் கோவில் – சிறப்பு
திருச்செந்தூர் முருகன் கோவில் ஆறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடு. சூரபத்மனை வீழ்த்திய முருகனின் வீரத்தளமாக இது அமைந்துள்ளது.திருச்செந்தூரை நக்கீரர் தனது திருமுருகாற்றுப்படை நூலில் இரண்டாம் படை வீடு என்று குறிப்பிடுகிறார். நக்கீரர் திருச்செந்தூரை திருச்சீரலைவாய் என்றும் சிலப்பதிகாரத்தில் செந்தில் என்றும் திருச்செந்திலூர், திரிபுவனமாதேவி, சதுர்வேதி மங்களம் என்றும் அழைக்கப்படுகிறது. அருணகிரிநாதர் காலத்தில் திருச்செந்தூர் என வழங்கப் பட்டது.
மூர்த்தி, ஸ்தலம், தீர்த்தம் — அனைத்து வகையிலும் இது மிகச்சிறப்பு வாய்ந்த தலம். இலங்கைத் தீவை வடக்கு எல்லையாகக் கொண்டு ஆட்சி செய்து வந்த சூரபத்மனை வெல்லும் பொருட்டு ஆறுமுகப் பெருமான் வீறுடன் வந்து தங்கியிருந்த ஸ்தலம் திருச்செந்தூர். விசுவாமித்திரரின் காசநோயை முருகன் தீர்த்த தலம் இது ஆகும். இங்கு தரப்படும் பன்னீர் இலை திருநீற்றை பூசியும் வாயில் இட்டுக் கொள்வதும் நோய் தீரும். அதேபோல் ஆதிசங்கரரின் நோயையும் தீர்த்த தலம். இக்கோவிலின் இவரின் திருவுருவம் சிவபெருமானை வழிபடும் நிலையில் இருக்கிறது. சிவபெருமானை வழிபட முருகனே அமைத்தார் என காச்சியப்பர் சுவாமிகள் கூறுகிறார். சுப்பிரமணிய சுவாமி (மூலவர்) சுவாமி கடற்கரை ஆண்டியாக காட்சி தருவதால் இருபுறமும் வள்ளி தெய்வானை சிலைகள் இல்லை. வலத்திருவடியில் வெள்ளி சீபலியும் இடத்திருவடியில் தங்க சீபலியுடனும் காட்சியளிக்கிறார்.
ஆறுமுகப் பெருமான் திருச்செந்தூரின் சிறப்பு மூர்த்தியாக ஆறுமுகம் வள்ளி தெய்வானையோடு காட்சி தருகிறார். வடமொழியில் இவரை ஷண்முகர் என்று கூறுவது உண்டு.
⚔️ சூரபத்மன் போரின் வரலாறு
சிவபெருமானின் நெற்றி கண்ணிலிருந்து எழுந்த தீபொறி சரவணப் பொய்கையில் ஆறு குழந்தைகளாக உதித்தது. பார்வதி தேவி அவற்றை ஒன்றிணைத்து ஆறுமுக ஸ்வரூபத்தை அளித்தார். சூரபத்மன் சிவபெருமானிடம் தன்னுடைய சக்தியால் தோன்றியவரைத் தவிர வேறு யாராலும் தனக்கு மரணம் ஏற்படக் கூடாது என வரம் பெற்றான். அதனால் அவன் தேவர்களை கொடுமை படுத்த துவங்கினான். சிவபெருமான் தனிமையில் தவம் மேற்கொணடார். அவருக்கு பார்வதி பணிவிடை செய்து வந்தார். தேவர்கள் ஒன்று சேர்ந்து இந்திரனிடம் சூரபத்மனின் கொடுமை தீர வழி செய்யுமாறு கேட்டனர். சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து வந்த தீ பொறி சரவண பொய்கையில் தாமரை மீது விழுந்தது. அதிலிருந்து முருகன் குழந்தை வடிவில் தோன்றினார்.
முருகப்பெருமான் சூரபத்மன் மீது படையெடுத்துப் போரிட வரும்போது, வழியில் எதிர்ப்பட்ட தாரகாசுரனையும், கிரௌஞ்ச மலையையும் அழித்துவிட்டுத் தன் படைகளுடன் வந்து திருச்செந்தூரில் தங்கியதாகவும் அங்கு தேவதச்சனான விஸ்வகர்மனால் அமைக்கப்பட்ட ஆலயத்தில் தங்கி தேவ குருவாகிய வியாழ பகவானால் பூசிக்கப்பட்டு பிறகு சூரபத்மனை அழித்தார். போரிலே வெற்றிகண்ட பெருமானை தேவர்கள் இத்தலத்திலேதான் பூசித்தனர். சுகப்பிரம்ம ரிஷி, வெள்ளை யானை இவர்கள் பூசித்துப் பேறு பெற்ற தலம். பிறகு முருகப்பெருமான் இங்கு அம்பிகையிடம் வேல் பெற்று, சூரபத்மன் மீது போர் தொடுக்கச் சென்றார். சூரபத்மன் அப்போது முருகப் பெருமானுடைய எதிரில் மாமரமாக நின்றான். சூரபத்மனை முருகப் பெருமான் தன்னுடைய வேலாயுதத்தால் இரு கூறாகப் பிளந்தார். மனக் கருணையால் அவனை ஆட்கொண்டார். மாமரம் இரண்டாகப் பிளந்தது. பிளந்தவுடனேயே அதன் ஒரு பாதி மயிலாகவும், மறுபாதி சேவலாகவும் மாறியது. மயிலை வாகனமாக அமைத்துக் கொண்டார். சேவலைக் கொடியாக ஏற்றுக்கொண்டார் முருகப்பெருமான்.
💧 நாழிக்கிணறு

முருகன் வேலால் பூமியைத் துளைத்துத் தோன்றிய புனித தீர்த்தம். நாழி அளவில் இருப்பதனால் “நாழிக்கிணறு” எனப் பெயர் பெற்றது. முருகப் பெருமான் தன் படை வீரர்களின் தாகத்தை தணிக்க தன்னுடைய வேலால் தரையில் குத்தி தாகம் தீர்த்ததால் புஷ்கரணி தீர்த்தம் உண்டானது. இது நாழி அளவு உள்ள கிணறாதலால் நாழிக்கிணறு என வழங்லாயிற்று. மேலும் வதனாரம்ப தீர்த்தம், வள்ளி தீர்த்தம் முதலிய இருபத்துநான்கு தீர்த்தம் சமுத்திரத்தில் உள்ளன. நாழிக்கிணறில் குளித்த பின்னர் கடலில் குளிப்பதற்கு இதுவும் ஒரு காரணம் ஆகும்.
🪨 வள்ளி அம்மன் குகை
மணற்கற்காலில் உருவான இயற்கை குகை. மிகக் குறுகிய வாயிலால் குனிந்து சென்று வள்ளி அம்மனை தரிசிக்க வேண்டிய இடம். வடக்கு கிரிவீதியிலிருந்து 15 மீட்டர் தொலைவில் மணற்பாறையில் வள்ளி குகை அமைந்து உள்ளது. குகைக்குள் நுழையும் வாயில் நான்கு அடி உயரமே உள்ளது. ஆகையால் குனிந்து மூன்று படிகள் ஏறி, இடப்புறம் திரும்பி மூன்று படிகள் இறங்கினால் வள்ளி அம்மனை தரிசிக்கலாம்.
🌺 சரவணப் பொய்கை
இதில் ஆறு தாமரைகளின் மீது முருகன் ஆறு குழந்தைகளாக தோன்றினார். பின்னர் பார்வதி தேவி ஆறுமுகனாக ஒன்றிணைத்தாள். ஆறு தாமரை மலர் மீது ஆறு (முருகன்) குழந்தைகள் படுத்தும் நடுவே பார்வதி தேவி குழந்தைகளை பாசத்துடன் பார்க்கின்ற காடசி மிகவும் அழகாக இருக்கும்.
🏰 இராஜகோபுரம்
இராஜகோபுரம் தரை மட்டத்திலிருந்து 137அடி உயரம் உடையது. ஒன்பது நிலைகளிலும் புராண வரலாற்று சிலைகள் கலை நயத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. கோபுரத்தின் கதவுகள் மூடியே இருக்கும். இம்மண்டபத்தின் நடுவே அழகிய வேலைப்பாடு அமைந்த நான்கு தூண்களைக் கொண்ட மணமேடை இருக்கிறது. ஐப்பசி மாதம் தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறும். அந்த காலங்களில் மட்டுமே கோபுர கதவு திறக்கப்படும்.
🛕 சண்முகவிலாஸ் மண்டபம்
தூண்கள் இல்லாத பொறியியல் அற்புத மண்டபம். கோவில் நுழைவின் முதன்மை மண்டபம்.
பஞ்ச லிங்கம்
சூரபத்மனை அழித்த பின் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தை நீக்க முருகன் பஞ்சபூதங்களை ஈடு செய்ய ஐந்து லிங்கங்களை பிரதிஷ்டை செய்தார். முருகப் பெருமான் சூரபத்மனுடன் போர் செய்த போது பல வீரர்கள் இறந்தார்கள். இதனால் இவருக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. (நீர் - திருவானைக்கா, நிலம் - காஞ்சிபுரம், நெருப்பு - திருவண்ணாமலை, வாயு - திருக்காளத்தி, ஆகாயம் - சிதம்பரம் ) பஞ்ச பூதங்களாக ஐந்து சிவலிங்கங்களை பிரதிஷ்டை செய்து பூஜை செய்தார். இறைவன் பூஜை செய்ததால் மனிதர்கள் பூஜைகள் செய்வது கிடையாது. அவ்வாறு செய்வது பாபமாகும்.
ஆண்டிகள் கட்டிய கோவில்
திருச்செந்தூர் முருகன் கோவிலை காசி சுவாமிகள், மௌன சுவாமிகள், தேசிக மூர்த்தி சுவாமிகள், ஆறுமுகம் சுவாமிகள், வள்ளி நாயக சுவாமிகள், ஆகிய ஐந்து பேர் இத்திருக் கோவிலை கட்டினார்கள். காசி சுவாமிகள் இத்திருக் கோவிலை கட்டும் போது தன்னுடைய வேலையாட்களுக்கு பன்னீரிலை விபூதி கொடுப்பது வழக்கம். அவர்கள் தூண்டு கை விநாயகர் கோவிலுக்கு அருகே சென்று பன்னீரிலையை பிரித்தால் அவர்கள் தாங்கள் எவ்வளவு வேலை செய்தார்களோ அதற்கான பணம் பன்னீரிலையில் இருக்கும். அவர்கள் வேலை செய்யாமல் தூங்கிக் கொண்டோ அல்லது நேரத்தை வீணாகக் கழித்து கொண்டோ இருந்தால் பன்னீரிலை விபூதியில் விபூதி மட்டுமே இருக்கும். காசி சுவாமிகள், மௌன சுவாமிகள், தேசிக மூர்த்தி சுவாமிகள், இவரது சிலை ஶ்ரீதட்சணா மூர்த்தி சன்னதிக்கு எதிராக உள்ளது.
மூவர் ஜீவ சமாது திருச்செந்தூர் முருகன் கோவிலை கட்டிய காசி சுவாமிகள், மௌன சுவாமிகள், ஆறுமுகம் சுவாமிகள், ஆகிய மூவர் ஜீவசமாது இத்திருக் கோவிலின் அருகே உள்ளது. மேலும் வள்ளி நாயக சுவாமிகள் சமாது தனியாக கோவில் நுழைவாயில் அருகே உள்ளது.
🔰 ஆறு படை வீடுகள்
🌟 திருச்செந்தூர் முருகனின் அற்புதங்கள்
- கடலில் மிதந்த கொடிமரம்
- ஊமையை பேச வைத்த முருகன்
- கனவில் அருள் காட்டும் முருகன்
- வியர்க்கும் சண்முகர்
- பன்னீரிலை அற்புதம்
- கடலில் மிதந்த முருகன்
- கடனை தீர்த்த முருகன்
- புண்ணிய தீர்த்தங்கள்
- நவக்கிரகாதிபதி
Comments
Post a Comment